பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் நாளை சோழிங்கநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
கடந்த சில நாள்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று(சனிக்கிழமை) சென்னையில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 76 காசுகள் அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.43-க்கும், டீசல் ரூ.94.47-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 5 நாள்களில் பெட்ரோல் விலை ரூ.3.03, டீசல் விலை ரூ.3.04 அதிகரித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் நாளை சோழிங்கநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதை கண்டித்து செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் மக்கள் நீதி மய்யம் சார்பாக நாளை(27.03.2022 -ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வெகுஜன மக்களை நாள்தோறும் நசுக்கும் மத்திய, மாநில அரசாங்கங்களின் விலை உயர்வைக் கண்டித்து மக்களுக்காக மய்யம் என்னும் ஒற்றை குரலோடு மய்யத்தினர் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்கின்றனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.