முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை மாநகர அரசுப் பேருந்தில் ஏறி பயணம் மேற்கொண்டு அங்கிருந்த மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
திமுக தலைவரும் மாநில முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி பதவியேற்றது. அதன்படி, திமுக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவுற்று இன்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்திற்குச் சென்று கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தன்னுடைய தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினும் உடனிருந்தார்.
இதையும் படிக்க | கோபாலபுரத்தில் கருணாநிதிக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை
இதன்பின்னர் சென்னை ஆர்.கே. சாலையில், சென்னை மாநகரப் பேருந்தில் ஏறி பயணம் மேற்கொண்டார். அங்குள்ள பெண்களிடம் 'இலவச பேருந்து பயணம்' குறித்துப் கேட்டறிந்தார். இந்த திட்டம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகக் கூறிய பெண்கள், சாதாரணக் கட்டணப் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாகவே இயக்கப்படுகிறது என்று கூறினர். அதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் பதில் அளித்தார். பின்னர் நடத்துனரிடமும் பேருந்து வழித்தடம் குறித்து கேட்டறிந்தார்.
பெரம்பூர் - பெசன்ட் நகர் செல்லும் '29சி' பேருந்தில் முதல்வர் ஆய்வு செய்தார்.