சிஎம்சி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அரை நிர்வாண ராக்கிங்: வைரல் விடியோ!

புதிதாக சேர்ந்த மாணவர்களை அரை நிர்வாணமாக விடுதி வளாகத்தைச் சுற்றி வர வைத்த சம்பவம் தற்போது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிஎம்சி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அரை நிர்வாண ராக்கிங்: வைரல் விடியோ!

வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் ராக்கிங்கில் ஈடுபட்ட ஏழு சீனியர் மாணவர்களை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

புதிதாகச் சேர்ந்த மாணவர்களை அரை நிர்வாணமாக விடுதி வளாகத்தைச் சுற்றி வர வைத்த சம்பவம் தற்போது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது சம்பந்தமான விடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில் முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர் இவர்கள் மீது நடவடிக்கை  எடுக்கப்பட்டு இருப்பதாக கல்லூரியின் முதல்வர் டாக்டர் சாலமன் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். 

கல்லூரியில் நிறுவப்பட்டு இருக்கும் கமிட்டிக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒரு கடிதம் கிடைத்தது என்றும், அதில் யார் பெயரும் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்தக் கடிதத்தில், ''மாணவர்கள் தங்கும் விடுதியில் புதிதாகச் சேர்ந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆடைகளைக் களைந்து விடுதி வளாகத்தை நடந்து சுற்றிவர வைத்தனர்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தைச் சிலர் சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளனர். 

இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது. இதுபோன்ற ராக்கிங் செயல்களை ஒருபோதும் நிர்வாகம் சகித்துக் கொள்ளாது என்று  முதல்வர் சாலமன் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

எவ்வாறு தாங்கள் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டார்கள் என்பதை அந்த மாணவர்களே தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். அந்த விடியோவில், மாணவர்கள் அரை நிர்வாணத்துடன் கல்லூரி தங்கும் விடுதியை சுற்றி வருகின்றனர். அவர்கள் மீது தண்ணீரும் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. இந்த விடியோ தற்போது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் விடுதியில் கடந்த 9 ஆம் தேதி நடந்ததாகவும், இதற்கு காரணமானவர்கள் மீதும், விடுதி வார்டன் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். 

தில்லியில் இருக்கும் ராக்கிங் தடுப்புப் பிரிவுக்கு புகார் வந்திருப்பதாக தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

தில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவர் டாக்டர் கார்த்திக், ட்விட்டர் பக்க பதிவில், தவறு செய்த மாணவர்களைக் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் நிர்வாகங்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com