பட்டீஸ்வரம் ஞானாம்பிகை சமேத தேனுபுரீஸ்வரசுவாமி கோயிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையான இன்று, அதிகாலை முதல் சிறப்பு தரிசனம் செய்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம், புகழ் பெற்ற தலமாக விளங்குகிறது. இந்த கோயில் ஞானாம்பிகை சமேத தேனுபுரீஸ்வரசுவாமி கோயில் அன்னை பராசக்தி தவம் செய்ததும், விஸ்வாமித்திரருக்கு பிரம்மரிஷி பட்டம் கிடைக்கப்பெற்றதும், திருஞான சம்மந்தருக்கு மற்றும் முத்துப்பந்தல் அமைத்து அதன் கீழ் நடந்து வரும் அழகை காண ஈசன், நந்தியை சற்று விலகி இருக்க கட்டளையிட்ட தலமுமான சிறப்பு பெருமையும் பெற்றதாகும்.
இங்குள்ள துர்கையம்மன் வடக்கு முகம் நோக்கி மகிஷன் தலை மீது நின்ற கோலத்தில் எட்டு கரங்களுடன் விஷ்ணு துர்க்கையாகவும், லட்சுமி துர்க்கையாகவும் அருள்பாலிக்கிறார். ராகு பகவானுக்கு அதிதேவதையாக துர்க்கையம்மன் விளங்குவதால் தங்கள் பிராத்தனைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற எலும்பிச்சபழ விளக்கேற்றியும், நெய் விளக்கேற்றியும் ராகு கால நேரத்தில் வழிபடுவதால் இது ராகு தோஷ பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.
இத்தலத்தில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் முத்துப்பந்தல் விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இத்தகைய சிறப்பு பெற்ற துர்க்கை தலத்தில், ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை முதல், ஏராளமானோர் தீபங்கள் ஏற்றியும், அர்ச்சனைகள் செய்தும் தரிசனம் செய்து வருகின்றனர்.