தூத்துக்குடி : முதல்வரின் காலை உணவுத் திட்டம் மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி. இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருக்குவளையில் வெள்ளிக்கிழமை காலை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி சோரீஸ்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை மக்களவை உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார்.
இப்பள்ளியில் காலை உணவாக கிச்சடி, கேசரி வழங்கப்பட்டது. மாணவர்-மாணவிகளுக்கு உணவை பரிமாறிய மக்களை உறுப்பினர் கனிமொழி, தொடர்ந்து அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
இந்த பள்ளியில் மொத்தம் 125 மாணவர்- மாணவியர் பயனடைந்தனர். மாவட்டம் முழுவதும் 524 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் மொத்தம் 18 ஆயிரத்து 819 மாணவ - மாணவியர் பயனடைந்தனர்.
தொடக்க விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா, சார் ஆட்சியர் கௌரவ்குமார், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்)வீர புத்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.