மதுரை ரயில் தீ விபத்தில், ஆன்மீக சுற்றுலா ஏற்பாடு செய்த தனியார் நிறுவன ஊழியர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியான நிலையில், 2வது நாளாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை ரயில் நிலையம் அருகே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுற்றுலா பயணிகள் ரயில் பெட்டி சனிக்கிழமை காலை 5 மணியளவில் தீப்பற்றி எரிந்தது.
ரயிலில் சமைத்து சாப்பிடுவதற்காக சமையல் எரிவாயு உருளைகள், 30 கிலோக்கும் அதிகமான விறகுகள், மண்ணெண்ணெய் அடுப்புகள் இருந்ததே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
ரயில் பெட்டியில் உள்புறமாக இருந்து கதவை பூட்டிவிட்டு, தேநீர் தயாரிக்க சமையல் எரிவாயு அடுப்பை பற்றவைக்கும்போது தீ விபத்து ஏற்பட்டதாக உயிர்த்தப்பிய பயணி தகவல் தெரிவித்த நிலையில், இதன் அடிப்படையில் தீ விபத்து சம்பவம் தொடர்பாக சுற்றுலா நிறுவன ஊழியர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது, சுற்றுலா நிறுவன ஊழியர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையிலடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.