சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் இருட்டடிப்பு செய்யப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ ரயில் நிறுத்தத்துக்கு “புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம்” என்று கடந்த ஆட்சியில் பெயர் வைக்கப்பட்டது.
மெட்ரோ ரயிலில் பயணிப்போரின் வசதிக்காக ஒவ்வொரு ரயில் நிலையத்துக்கு முன்பும் ரயில் நிலையத்தின் பெயரை அறிவிப்பது வழக்கம். அதன்படி கோயம்பேடு பேருந்து நிலைய நிறுத்தத்தை “புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம்” என்று முழுமையாக அறிவிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக “புறநகர் பேருந்து நிறுத்தம்” என்று மட்டுமே அறிவிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தமிழக அரசு சூட்டிய பெயரை மெட்ரோ ரயில் நிர்வாகம் முழுமையாக அறிவிக்காததற்கு கண்டனம் தெரிவித்துள்ள இபிஎஸ், முழுமையாக அறிவிக்கவில்லை என்றால் மெட்ரோ நிர்வாகத்துக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.