பண மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமைச்சா் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனா். அவரது கைது சட்டப்படியானது என உச்ச நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
இந்த நிலையில் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை ஆஜர்படுத்தியது.
அப்போது அவரின் நீதிமன்றக் காவலை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த முறை காணொளியில் ஆஜரானபோது நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.