மாநிலங்களவையில் கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
மாநிலங்களவையில் பெரியாரை மேற்கோள் காட்டி திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா பேசியதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததை முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருப்பதாவது: மாநிலங்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா உரையாற்றும்போது சுட்டிக்காட்டிய தந்தை பெரியாரின் மேற்கோளுக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்; பெரியாரின் பெயரும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது!
மண்டல் ஆணையப் பரிந்துரையை அமல்படுத்தியபோது தந்தை பெரியார்தான் இதற்குக் காரணம் என்று பிரதமர் வி.பி.சிங் பேசிய நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் பெயர் நீக்கப்பட்டுள்ளது அவமானம்!
மக்களின் மனங்களில் நிலைத்து நின்று, வகுப்புவாதிகளை இன்றளவும் அச்சுறுத்தும் தந்தை பெரியாரின் பெயரை எங்கும் - எப்போதும் - எந்தச் சூழலிலும் பயன்படுத்துவோம்! அனைவரும் பயன்படுத்துங்கள்! எனப் பதிவிட்டுள்ளார்.