தொடர் கனமழை காரணமாக நெல்லை மாநகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது.
தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
இதனால், தாமிரவருணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட அறிவியல் மையம், திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் தண்டவாளங்கள் தெரியாத அளவிற்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பேருந்துகள் ஏராளமான கார்கள் நீரில் மூழ்கியுள்ளன.
திருநெல்வேலியில் நகரம் முழுமையாக வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.
நெல்லை கொக்கரவலம் பகுதியில் குடியிருப்புகளில் சிக்கி உள்ளவர்களை படகுமூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. நெல்லை சந்திப்பு சிந்து பூந்துறை, மேகலிங்கபுரம், உடையார்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
அங்கும் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி அருகே வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
ஏராளமானோர் வீட்டுக்குள் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக காத்திருக்கின்றனர்.