திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடை ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நடை திறக்கப்பட்டதும் கோயில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தீபம் ஏற்றுகிறார். வேறு பூஜைகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோயிலில் கரோனா தளர்வுக்கு பிறகு இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் பக்தர்கள் அதிக அளவு வந்து தரிசனம் பெற்றனர். இந்த காலங்களில் கோயிலுக்கு ரூ.360 கோடி அளவில் வருமானம் கிடைத்தது. மகரவிளக்கு பூஜைக்கு பின்னர் கடந்த மாதம் (ஜனவரி) 20 ஆம் தேதி சபரிமலை கோயில் நடை சாத்தப்பட்டது.
இந்நிலையில், திங்கள்கிழமை (பிப்.13) மாசி மாதம் பிறக்க உள்ளதால், மாதாந்திர பூஜைகளுக்காக கோவில் நடையை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும், பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவும் தொடங்கியது.
இதையும் படிக்க | பாஜகவுக்கு உதவும் செயலில் திரிணமூல்: காங்கிரஸ்
இதனைத் தொடர்ந்து மாசி மாத பூஜைகளுக்காக கோயில் நடை ஞாயிற்றுக்கிழமை(பிப்.12) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நடை திறக்கப்பட்டதும் கோயில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தீபம் ஏற்றுகிறார். வேறு பூஜைகள் எதுவும் இல்லை.
திங்கள்கிழமை (பிப்.13) காலை 5 மணிக்கு நடை திறந்ததும் நெய் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும். 17 ஆம் தேதி வரை கோயில் திறந்திருக்கும். இந்த நாள்களில் நெய் அபிஷேகம், கலசாபிஷேகம், படி பூஜை போன்றவை நடைபெறும்.
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 17 ஆம் தேதி இரவு 7 மணிக்கு படிபூஜை முடிந்ததும் 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. சபரிமலை கோயில் நடை திறக்கப்படுவதை முன்னிட்டு ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.