மதுரை கூடல் அழகர் கோயில் குளத்தை சுற்றி, ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்றக்கோரிய வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த சுசீந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில் மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயில் மதுரையின் சிறப்பு. இந்த கோயில் வைணவ கோவில்களில் முக்கியத்துவம் வாய்ந்தது. கோயிலின் குளம் புனிதமாக கருதப்படும் சூழலில், கோயிலை சுற்றி அரசியல் பலம் கொண்ட சிலர் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை சட்டவிரோதமாக அமைத்துள்ளனர்.
ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் தெப்பத் திருவிழாவின் போது இந்த கடைகளால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகவே மதுரை கூடல் அழகர் பெருமாள் கோவில் குளத்தை சுற்றி, ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு, வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலின் செயல் அலுவலர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.