/

கல்லணைக்கு மேலும் கீழும் 15 கி.மீ.க்கு மணல் குவாரிகள் செயல்பட இடைக்காலத் தடை

கல்லணையின்  மேலும் கீழும் 15 கிலோ மீட்டர் தொலைவில்  இயங்கும் மணல் குவாரிகள் செயல்பட இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 6:37 pm

DIN

கல்லணையின்  மேலும் கீழும் 15 கிலோ மீட்டர் தொலைவில்  இயங்கும் மணல் குவாரிகள் செயல்பட இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி லால்குடியை சேர்ந்த கொள்ளிடம் சேர்ந்த  சண்முகம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "திருச்சி, கல்லணை மற்றும் அதை சுற்றி உள்ள பூதலூர், லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மணல் எடுப்பது தொடர்ந்தால் கல்லணை சேதமடைய வாய்ப்புள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் முழுவதுமாக பாதிக்கப்படுவதுடன், அப்பகுதி மக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவர்.

ஆகவே கல்லணையில் மேலும் கீழும் 15 கிலோ மீட்டர் தொலைவில் மணல் எடுக்க இடைக்கால தடை விதிப்பதோடு, அப்பகுதிகளில் குவாரி நடவடிக்கைகளை மேற்கொள்ள முற்றிலுமாக தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அரசுத்தரப்பில், அப்பகுதியில் 4 அரசு மணல் குவாரிகள் செயல்படுவதாகவும், உரிய அனுமதி பெற்று  குவாரி இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், அனுமதி பெற்று இயங்கினாலும், விதிகளை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தொடர்ந்து, வழக்கு தொடர்பாக அரசுத்தரப்பில் ஜனவரி 11ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும், அதுவரை கல்லணையின் மேலும் கீழும் 15 கிலோ மீட்டர் தொலைவில் இயங்கும் மணல் குவாரிகள் செயல்பட இடைக்காலத் தடை விதித்து வழக்கை ஜனவரி 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.