உதயநிதியின் செயல்பாடுகளை நாள்தோறும் கண்காணித்து வருவதாக திமுக இளைஞரணி செயலி தொடக்க விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி செயலியையும் திராவிட மாடல் பயிற்சி பாசறையையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், திமுகவில் எத்தனை அணிகள் இருந்தாலும் இளைஞர் அணிதான் முதன்மையாக உள்ளது. சமூக ஊடகங்களில் நல்ல செய்திகளும் வருகின்றன. விமர்சனங்களும் வருகின்றன. அதனை பொருட்படுத்தாது பணி செய்ய வேண்டும்.
நீட் தேர்வு எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு, குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டங்களில் திமுக இளைஞரணி சிறப்பாக செயல்பட்டுள்ளது.
உதயநிதியின் செயல்பாடுகளை நாள்தோறும் கண்காணித்து வருகிறேன். அவரைப்பற்றி நல்ல செய்திகளும் வருகின்றன. விமர்சனங்களும் எழுகின்றன.
நீர் நிலைகள் பாதுகாப்பு, தூர்வாருவது உள்ளிட்ட அரசு பணிகளில் திமுக சார்பாக உதயநிதி பங்கெடுத்தார்.
ஊராட்சி தேர்தலின்போது உதயநிதி சுற்றுப்பயணம் செய்து பெரிய எழுச்சியை ஏற்படுத்தினார். உதயநிதிக்கு துணை நிற்பவர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டார்.