தூத்துக்குடி: தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வீசிவரும் சூறாவளி காற்று காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், செவ்வாய்க்கிழமை காலையில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தென் தமிழகக் கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. இந்தக் காற்று 45 கி.மீ. முதல் 65 கி. மீ. வரை சுழல் காற்றாக வீசி வருகிறது. இதனால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தூத்துக்குடி மாவட்ட மீன்வளத் துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் தமிழக கடல் பகுதி, மன்னார் வளைகுடா, குமரிக் கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 45-55 கி. மீ. வேகத்தில் வீசும் காற்றானது, 65 கி.மீ. வேகம் வரை வீசக்கூடும். எனவே, விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் 500க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆழ்கடல் மீன் பிடிப்பிற்கு ஏற்கனவே சென்றுள்ள மீனவர்கள் பாதுகாப்பாக தீவு பகுதியில் தங்கி மீன்களை பிடிக்க வேண்டும் எனவும் மீன்வளத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.