சென்னை: கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து கடந்த ஒரு வாரமாக மிக கனமழை பெய்து வரும் நிலையில், எல்லையோர தமிழக மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகின்றது.
இந்நிலையில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளையும் கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.