திருப்பத்தூர்: திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தண்டாயுதபாணி கோயிலின் கும்பாபிஷேகம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள கற்பக விநாயகர், சக்தி மாரியம்மன், பொன்னியம்மன் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை அனுக்ஞை விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கி, வெள்ளி மற்றும் சனிக்கிழமை பல்வேறு ஹோமங்கள் தொடர்ந்து நடைபெற்றது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கியது. பின்னர், பரிவார பிரதான கலசங்கள் கோயில் வலம் வந்தது. தொடர்ந்து
6.30 மணிக்கு கற்பக விநாயகர் கோயில் கும்பாபிஷேகம், 7 மணிக்கு சக்திமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம், 7.30 மணிக்கு பொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர், காலை 10.30 மணியளவில் தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோபுர கலசங்கள் மீது தீபாராதனை செய்யப்பட்டு, மலர் தூவி புனித நீர் ஊற்றப்பட்டது.
இதையும் படிக்க: நீலகிரி, கோவையில் கனமழை தொடரும்!
அப்போது பக்தர்கள் அரோஹரா என்று முழக்கங்கள் எழுப்பினர். இதில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.