மதுரையில் தான் பயின்ற மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளர்ச்சிக்காக ரூ.20 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார் பேராசிரியரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா.
பேராசிரியர் சாலமன் பாப்பையா, கடந்த 1941 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை மதுரை ஆரப்பாளையம் கிராஸ் சாலையில் உள்ள வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றார்.
தற்போது, இந்த பள்ளி பெண்கள் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்த நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வகுப்பறை கட்டும் பணிக்காக ரூ.20 லட்சத்துக்கான காசோலையை மதுரை மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமாரிடம் சாலமன் பாப்பையா வழங்கினார்.
இதற்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
தனக்குப் பயன்தந்து இன்பமூட்டிய கல்வியை வழங்கிய வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளி இன்னும் பல்லாண்டுகள் நீடித்துநின்று பலருக்கும் கல்விப் பயனை நல்க வேண்டும் என்று விழைந்து அப்பள்ளிக்கு 20 இலட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ள தமிழறிஞர் ஐயா சாலமன் பாப்பையாவிற்கு நன்றியும் பாராட்டுகளும் என்று சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.