சங்கரன்கோவில் நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் இரு மாதங்களுக்கான சம்பள நிலுவையை வழங்கக் கோரி, இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவர்களிடம் நகராட்சியினர், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சியில் மொத்தம் 30 வாா்டுகள் உள்ளன. இதில் 20 வாா்டுகளின் தூய்மைப்பணிகளை, மதுரையைச் சேர்ந்த தனியாா் நிறுவனம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிறுவனத்திடம் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு தாமதமாக சம்பளம் வழங்கப்படுவதாகப் புகாா் இருந்து வருகிறது.
இதையும் படிக்க | பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம்; கூட்டுப் பாலியல்: மணிப்பூரில் கொடூரம்
இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லையாம். இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் பணிகளைப் புறக்கணித்து, மாதாங்கோவில் தெருவில் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நகராட்சி அதிகாரிகள், போலீசார்.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற போராட்டத்திற்கு பின்னர், நகராட்சி சுகாதார அலுவலா் பாலச்சந்தா், அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். மாலை 5 மணிக்குள் நிலுவை சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் இல்லையெனில் அந்த ஒப்பந்ததாரர் உரிமம் ரத்து செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டதையடுத்து போராட்டம் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால் மீண்டும் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் வருவாய்த் துறையினர், நகராட்சியினர், காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.