தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு கலப்பு திருமண தம்பதியினர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொட்டல்புதூர் பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி - நாகூர் ஆசியான் (மாற்றுதிறனாளி) என்ற கலப்புத் திருமண தம்பதியினர் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் பங்கேற்று மனு கொடுக்க வந்திருந்தனர்.
அப்போது, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக நுழைவாயிலில் வைத்து முத்துசாமி தனது தலையில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அதை பார்த்த காவலர்கள் ஓடி வந்து அவரது தலையில் தண்ணீரை ஊற்றி அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
பொட்டல்புதூர் பகுதியைச் சேர்ந்த உடையார் என்பவரது மகனான ஆதிமூலம் என்பவர் தனது நிலத்தை ஆக்கிரமித்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், தங்களுக்கு அரசால் வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டாவை ஆதிமூலம் தனது பண பலத்தாலும், அதிகார பலத்தாலும் சில அதிகாரிகள் மூலம் ரத்து செய்து தங்களை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் கூறினார்.
மேலும், இது குறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தாங்கள் தற்போது தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு இந்த செயலில் ஈடுபட்டதாக அழுதபடி தெரிவித்தார்.
தொடர்ந்து அவர்களை சமாதானப்படுத்திய காவலர்கள் அவரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அழைத்துச் சென்று அவர்களது கோரிக்கை மனுவை அளிக்க வைத்தனர்.