புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனாவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக உள்ள வெ.இறையன்பு நாளை(ஜூன் 30) ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைமைச் செயலாளரை தேர்வு செய்யும் பணிகள் கடந்த சில நாள்களாகவே நடைபெற்று வந்தன.
இந்நிலையில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத் தலைவராக உள்ள ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகத் துறை செயலராக உள்ள சிவ்தாஸ் மீனா, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர் ஆகிய மூவர் இறுதிப் பட்டியலில் இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் 49 ஆவது தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனாவை நியமித்து தமிழ்நாடு அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போதைய தலைமைச் செயலாளர் இறையன்பு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சிவ்தாஸ் மீனா தற்போது நகராட்சி நிர்வாகம்- நீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக உள்ளார்.
1989 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான சிவ்தாஸ் மீனா, ராஜஸ்தானைச் சேர்ந்தவர். காஞ்சிபுரம் உதவி ஆட்சியராகத் தொடங்கி வேலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியராக இருந்தார்.
போக்குவரத்து, கூட்டுறவு, சுகாதாரம், மின்சாரம், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர். 2016-ல் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அவரது 4 தனிச் செயலாளர்களில் ஒருவராக இருந்தார்.
தலைமைச் செயலாளரைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபியாக தற்போதைய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.