நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் மாசிமகா குருவாரவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்றது. நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது.சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் மாசிமகா குருவார தரிசன விழா வியாழக்கிழமை அதிவிமரிசையாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு யாகசாலை பூஜைகள், அதனைத்தொடர்ந்து குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக - ஆராதனைகள், பகல் 12 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், பஞ்சமுக அர்ச்சனையும், மாலையில் குருவார தரிசனமும் நடந்தது.
கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணியர், சனீஸ்வர பகவான் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. குருபகவான் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
ஆலங்குடி பாலமுருகன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசைக் கச்சேரியும் நடந்தது. விழாவில் முன்னாள் அமைச்சர் ,நன்னிலம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.காமராஜ் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் மற்றும் செயல்அலுவலர் மணவழகன்,கோயில் கண்காணிப்பாளர் அரவிந்தன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.