அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு விவகாரத்திற்குப் பிறகு எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. ஒற்றைத் தலைமை தொடர்பாக சர்ச்சைகள் தொடங்கியதிலிருந்தே அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டு வந்தார்.
இதையும் படிக்க | கரோனா பரவல் அதிகரிப்பு: தமிழகத்திற்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம்
இந்நிலையில் வியாழக்கிழமை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவது குறித்து கருத்து பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர், “தமிழ்நாடு அரசு மார்ச் 20ஆம் தேதி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறது. அதற்கு பிறகு நிதிநிலை அறிக்கை குறித்து பேசலாம். வாய்ப்பு அமைந்தால் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன். விரைவில் சசிகலாவை சந்திப்பேன். கட்சி விதிகளுக்கு எதிராக எடப்பாடி கே.பழனிசாமி செயல்பட்டு வருகிறார்” எனத் தெரிவித்தார்.
டிடிவி தினகரன் மற்றும் சசிகலா உடன் இணைந்து செயல்படுவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படுத்தியுள்ள கருத்து அரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளது.