மற்ற படங்களுக்கு வராத நெருக்கடி ஏன் விஜய் நடித்துள்ள லியோ படத்திற்கு மட்டும் வருகிறது என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: “லியோ’ படத்தை வைத்து அரசியல் செய்யவில்லை என்று சொல்வதே ஒரு அரசியல்தான். மற்ற படங்களுக்கு எல்லாம் தரப்படாத நெருக்கடி ஏன் விஜய் நடித்துள்ள படத்திற்கு மட்டும் தரப்படுகிறது. காவலர்கள் பாதுகாப்பு எல்லாம் தேவை இல்லாத வேலை. இதேபோல ஏன் ஜெயிலர் படத்திற்கு செய்யவில்லை.
தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு விஜயை தொந்தரவு செய்வது வெளிப்படையாக தெரிகிறது. இதற்கு முன்பு வெளியான விஜய் படங்களுக்கு கூட இவ்வளவு நெருக்கடி இல்லை. அதுதான் சந்தேகத்தை எழுப்புகிறது.
சினிமா வியாபாரம் பெருகிவிட்ட நிலையில் சிறப்புக் காட்சிகள் இருந்தால்தான் லாபம் கிடைக்கும். நாங்கள் ஆட்சிக்கு வரும்போது சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதியளிப்போம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: கேப்டன் மில்லர்: முக்கிய கதாபாத்திரத்தில் அதிதி பாலன்!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகும் இப்படத்தை திரையிடும்போது, பார்வையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன நிறுத்துமிடங்கள், போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தக் கூடாது மற்றும் அதிக கட்டணத்துக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யக் கூடாது என சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்திருந்தது.