தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனுவின் மீது பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் கருப்பையா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “தமிழகத்தில் தற்போது அமைச்சர்களாக உள்ள பலர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகள் உள்ளன.
திமுக ஆட்சிக்கு வந்ததும் அவற்றின் மீது முறையான விசாரணை நடத்தப்படாமல், சில அமைச்சர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. எனவே அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிக்க: விஷால் பேசியது ரொம்பத் தவறு: மன்சூர் அலிகான்
இந்த மனுவை நேற்று (அக்டோபர் 20) விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், செந்தில் பாலாஜி ஆகியோர் மீதான வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, பின்பு உயர்நீதிமன்றத்தால் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பிரமுகர்கள் மீதான வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.