சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், அந்த ஊர்களிலிருந்து சென்னைக்கும் 10,975 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9, 10, 11ஆம் தேதிகளில் 10,975 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
படிப்பு, வேலை நிமித்தமாக சொந்த ஊர்களை விட்டு வேறு பகுதிகளில் வாழ்வோர் பண்டிகைக் காலங்களில் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், 2023ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், எத்தனை சிறப்புப் பேருந்துகளை, எந்தெந்த ஊர்களுக்கு இயக்குவது என்பது தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் இன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பிறகு, தமிழகம் முழுவதும் தீபாவளியை முன்னிட்டு 10 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கும், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கும் வழக்கமாக இயக்கப்படும் 6300 பேருந்துகளுடன், கூடுதலாக 4,675 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
சென்னை உள்ளிட்ட நகரங்களிலிருந்து தீபாவளிக்கு சுமார் 6 லட்சம் பேர் பயணிக்கும் வகையில் போக்குவரத்து துறை ஏற்பாடு செய்து வருகிறது.