பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு ஆலந்தூர் நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்தது.
சென்னை பனையூரில் உள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் இல்லத்தின் வெளியே 100 அடி உயரம் கொண்ட பாஜக கொடிக் கம்பம் நடப்பட்டிருந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து முன்அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை காவல்துறையினர் கடந்த 20-ஆம் தேதி இரவு அகற்றினர்.
அப்போது பாஜக - காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவத்தின்போது ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடியை கற்களை வீசி பாஜகவினர் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்டோரை கடந்த வாரம் கைது செய்தனர்.
இந்நிலையில், அமர் பிரசாத் ரெட்டியை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்த நிலையில், ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டி அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.