முதல்வராக சொன்னதும் பிரதமரானதும் செய்ததும்: மு.க. ஸ்டாலின் சொல்வது என்ன?

மாநில சுயாட்சி குறித்து குஜராத் முதல்வராக இருந்த போது, நரேந்திர மோடி சொன்னதும் பிரதமரானதும் அவர் செய்ததும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.
முதல்வராக சொன்னதும் பிரதமரானதும் செய்ததும்: மு.க. ஸ்டாலின் சொல்வது என்ன?

மாநில சுயாட்சி குறித்து குஜராத் முதல்வராக இருந்த போது, நரேந்திர மோடி சொன்னதும் பிரதமரானதும் அவர் செய்ததும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

தமிழகத்தின் குரல் என்ற மூன்றாவது நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றியிருக்கிறார். அதில், இந்த மூன்றாவது நிகழ்ச்சியில் நான் பேசப்போவது மாநில உரிமைகள்! 

இந்தியா என்பதே, கூட்டாட்சித் தன்மை கொண்ட நாடு. இங்கே பல்வேறு மொழிகள், இனங்கள், பண்பாடுகள், பழக்க வழக்கங்கள் கொண்ட மக்கள் வாழுகிறார்கள். நம்முடைய மக்களிடம் ஏராளமான சமய நம்பிக்கைகள் இருக்கிறது; பல்வேறு வழிபாட்டு முறைகள் இருக்கிறது. அவர்களுக்கான அரசியல்சட்ட உரிமைகளும் இருக்கிறது. இத்தனை வேறுபாடுகளையும் கடந்து, நாம் எல்லாரும் ஒற்றுமையாக வாழ்கிறோம். சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், இந்தியா பல்வேறு அழகிய மலர்கள் நிரம்பிய அற்புதமான பூந்தோட்டம்!

அதனால்தான், நம்முடைய நாட்டின் நிர்வாக அமைப்பை உருவாக்கியவர்கள், ஒற்றைத்தன்மை கொண்ட நாடாக இல்லாமல், கூட்டாட்சி நெறிமுறை கொண்ட - மாநிலங்களின் ஒன்றியமாக உருவாக்கினார்கள்.

நம்முடைய பிரதமர் மோடி, இதற்கு முன்பு குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தார். அப்போதெல்லாம் மாநில உரிமைகளுக்கு ஆதரவாக நிறைய பேசினார். ஆனால், பிரதமராகி தில்லிக்கு வந்ததற்கு பின்பு, அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வரியே அவருக்குப் பிடிக்காமல் போய்விட்டது. அந்த வரி என்ன என்றால், இந்தியா என்பது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்! (India, that is Bharat, shall be a Union of States!)

முதலமைச்சராக மாநில உரிமைகளைப் பேசியவர், இப்போது பிரதமராகி மாநில உரிமைகளைப் பறிக்கிறார்! பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி, மாநிலங்களை ஒழிக்க வேண்டும், அப்படி இல்லை என்றால், முனிசிபாலிட்டிகளாக மாற்றிட வேண்டும் என்று நினைக்கிறது. மோடி அவர்கள் முதலமைச்சராக இருந்த வரைக்கும் பேசியதற்கும், பிரதமர் ஆனதும் செய்வதற்கும் இருக்கும் வேறுபாட்டிற்கு, சில எடுத்துக்காட்டுகளை மட்டும் உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்.

தில்லியை மையப்படுத்தாமல் மாநிலங்களுக்கு ஏற்ற அணுகுமுறையோடு திட்டங்கள் தீட்டப்படும் என்று பிரதமர் சொன்னார். ஆனால், மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றுக் கருத்து தெரிவிக்கும் திட்டக்குழுவைக் கலைத்துவிட்டு, சத்தே இல்லாத ‘நிதி ஆயோக்’ அமைப்பை உருவாக்கினார்.

மாற்றுக்கட்சி ஆட்சிகளைப் பழிவாங்கமாட்டேன் என்று சொன்னார். ஆனால் பா.ஜ.க. என்ன செய்கிறது? எங்கு எல்லாம் பா.ஜ.க. ஆட்சிக்கு வர முடியவில்லையோ, அங்கு இருக்கும் கட்சிகளை இரண்டாக, மூன்றாக உடைத்து, எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சி நடத்துகிறார்கள்.

முக்கியமாக இன்னொன்றையும் பிரதமர் சொன்னார்…

“கூட்டாட்சிக் கருத்தியலை ஆதரிப்பவன் நான். தில்லிக்குக் காவடி தூக்கும் நிலைமையை மாற்றுவேன்” என்று சொன்னார். ஆனால், இப்போது என்ன நடக்கிறது என்றால், மாநில அரசின் திட்டங்களை நிறைவேற்றக்கூட, மத்திய அரசின் வாசலில் காத்திருக்க வேண்டிய நிலையை உருவாக்கியிருக்கிறார்கள்.

மறைமுக வரிவிதிப்பில் சீர்திருத்தம் செய்ய எல்லா மாநில அரசுகளோடும் ஆலோசனை செய்வோம் என்று பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள்.

கூடுதலாகப் பிரதமர், மாநில அரசுகளுக்கு அதிக நிதி ஆதாரங்களை வழங்குவோம் என்று சொன்னார்… ஆனால், ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் காலத்தைக் கூட நீட்டிக்க முடியாது என்று சொல்லிவிட்டார். மாநிலங்களின் பங்கையும் ஒழுங்காகக் கொடுப்பதில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், மாநிலங்களின் நிதி நிலைமை ஜி.எஸ்.டி.யால் இப்போது ஐ.சி.யூ-வில் இருக்கிறது!

12-ஆவது நிதி கமிஷனில் இருந்து நிதி ஒதுக்கீடு குறைந்துவிட்டதனால், கடந்த 19 ஆண்டுகளில் நம்முடைய தமிழ்நாட்டிற்கு சுமார் 85 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, இனிமே ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தமிழ்நாட்டிற்கு இழப்பு ஏற்படப் போகிறது.

அதேமாதிரி, கிராமப்புற ஏழை – எளிய தாய்மார்களின் வாழ்வாதாரத்திற்கு உயிர்மூச்சாக இருக்கும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு நிதியைக் குறைத்தது மட்டுமல்ல, வேலை செய்யும் தாய்மார்களுக்குச் சம்பளம் கூட ஒழுங்காகக் கொடுக்காமல் பா.ஜ.க. ஆட்சியில் இழுத்தடிக்கிறார்கள்.

இந்த நிலைமை தமிழ்நாட்டிற்கு மட்டும் என்று நினைக்காதீர்கள். இதை கேட்டுக்கொண்டு இருக்கும் உங்கள் எல்லோரின் மாநிலத்திலும் இதே தான் நிலைமை!

இப்போது மத்திய அமைச்சர் ஒருவர் என்ன சொல்கிறார் என்றார், “மோடி படத்தைப் போடவில்லை என்றால், மாநில அரசுகளின் திட்டங்களுக்குத் தருகிற நிதியை நிறுத்துவோம்” என்று சொல்கிறார்…! இதுதான் மாநிலங்களுக்கு அதிக நிதி ஆதாரங்களைத் தருவோம் என்று சொன்ன பா.ஜ.க. ஆட்சியின் உண்மை முகம்!

மாநிலப் பிரச்சினைகளுக்கு, சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையே கவுன்சில் அமைத்து, தீர்வு காண்போம் என்று சொன்னார்கள். அந்தக் கவுன்சிலையும் முடக்கிவிட்டார்கள்.

மாநிலங்களின் கருத்தை கேட்கவும் மனசில்லை... அரசியல் சட்டம் வழங்கிய அதிகாரத்திற்குள்ளேயும் மாநிலங்களைச் செயல்பட விடுவதில்லை… ஆளுநர் மாளிகைகளை வைத்து மாநில நிர்வாகத்தை முடக்குவதை ஒரு ஆக்‌ஷன் பிளானாகவே வைத்திருக்கிறது பா.ஜ.க.!

அதனால்தான், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 19 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இருக்க பா.ஜ.க. ஆளுநரைப் பயன்படுத்துகிறது. மாநிலங்களின் உரிமையையும் – சட்டமன்றங்களின் மாண்பையும் எப்படியெல்லாம் சிறுமைப்படுத்துகிறார்கள் என்று பாருங்கள்!

உலகத்தின் பெரிய இந்திய ஜனநாயக அமைப்பையே சின்னாபின்னப்படுத்தி சிதைத்துக்கொண்டு இருக்கிறார்கள். மொத்தத்தில், பா.ஜ.க. ஆட்சியில் மாநில உரிமைகள் நசுக்கப்பட்டு, நம் அரசியல் சட்டம் தந்த கூட்டாட்சிக் கருத்தியல், ஜனநாயகம் என எல்லாம் மக்களோடு சேர்ந்து கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறது!

இவர்கள் செய்வதில் மிக மோசமானது என்ன என்றால், மாநிலங்களின் கல்வி உரிமையில் தலையிட்டு, குழந்தைகளின் எதிர்காலத்தோடு விளையாடுவதுதான். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பண்பு இருக்கிறது – ஒரு கலாச்சாரம் இருக்கிறது – அவர்களுக்கு என்று தனிப்பட்ட சிந்தனை இருக்கிறது. இதையெல்லாம் அழிப்பதற்கான கொள்கைதான் தேசிய கல்விக் கொள்கை! இவ்வாறு பா.ஜ.க. ஆட்சி பறித்த உரிமைகளை ஒன்று ஒன்றாகப் பட்டியல் போட வேண்டும் என்றால், இன்னும் பத்து எபிசோட் பேசலாம்.

இது எல்லாவற்றில் இருந்தும் நம்மைப் பாதுகாக்க இருக்கும் ஒரே கவசம், மாநில சுயாட்சிதான்! 1974-ஆம் ஆண்டு கருணாநிதி, நாட்டுக்கே முன்னோடியாக, மாநில உரிமைகளுக்கு வலுசேர்க்க இராஜமன்னார் குழு அமைத்தார்; அந்தக் குழுவின் பரிந்துரைகளைச் சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாநில சுயாட்சித் தீர்மானமாக நிறைவேற்றினார்.

இவ்வாறு நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தைத்தான், அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களும், “இவை முக்கியமான பிரச்னைகள், அனைத்து முதல்வர்களிடமும் ஆலோசனை நடத்த உள்ளோம்” என்று சொன்னார். தலைவர் கருணாநிதி தி.மு.க.வின் கொள்கைகளை ஐம்பெரும் முழக்கங்களாகச் சொன்னார். அதில் ஐந்தாவது முழக்கம், “மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!”

இந்தக் குரலைத் தெற்கில் மட்டுமல்ல, வடக்கில் காஷ்மீரத்துச் சிங்கம் ஷேக் அப்துல்லா – கிழக்கில் வங்கத்தில் பொதுவுடைமைத் தோழர், ஜோதிபாசு ஆகியோரும் எதிரொலித்தார்கள்.

மாநில சுயாட்சி என்ற கொள்கை வெல்ல வேண்டும் என்றால், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கு மக்கள் தயாராக வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, மினி நாடாளுமன்றத் தேர்தலாகப் பார்க்கப்படும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடக்க இருக்கிறது. அதில் வாக்களிக்கப் போகும் வாக்காளப் பெருமக்களும் இதை மனதில் வைத்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com