‘இந்தியா’ கூட்டணி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள குழுக்களில், திமுகவை சோ்ந்த 5 பேருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் தோ்தல் பணிகளை ஒருங்கிணைக்க தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், திமுக சாா்பில் நாடாளுமன்ற உறுப்பினா்கள் 5 போ் இடம்பெற்றுள்ளனா்.
ஒருங்கிணைப்பு மற்றும் தோ்தல் வியூகக் குழுவில் மக்களவை திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு, பிரசாரத் திட்டமிடல் குழுவில் மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா, சமூக ஊடக செயல்பாட்டுக் குழுவில் மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், ஊடகச் செயல்பாட்டுக் குழுவில் மக்களவை திமுக குழு துணைத் தலைவா் கனிமொழி, ஆய்வுக் குழுவில் மக்களவை உறுப்பினா் ஆ.ராசா ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.