திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா கொடிப்பட்ட வீதி உலா இன்று (செப். 4) வெகு விமரிசையாக நடைபெற்றது.
இக்கோயிலில் ஆவணித் திருவிழாவானது (செப். 4) அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை கொடிப்பட்ட வீதி உலா நடைபெற்றது. 14 ஊர் செங்குந்தர் முதலியார் உறவின்முறை 12-ஆம் திருவிழா மண்டகப்படி மண்டபத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட கொடிப்பட்டத்தை 1-ம் படி படி செப்பு ஸ்தலத்தார் ஐ.ஆண்டி சுப்பிரமணியன் ஐயர் யானை மீது வைத்து கையில் ஏந்தியவாறு வீதி உலா வந்து திருக்கோயில் சேர்ந்தார். நிகழ்ச்சியில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் இரா.அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், பா.கணேசன், ந.ராமதாஸ், வி.செந்தில்முருகன், இணை ஆணையர் மு.கார்த்திக் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.