புறா எச்சத்தால் நுரையீரல் செயலிழப்பு: குஜராத் பெண்ணுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை

புறாவின் எச்சங்கள் நிறைந்த சூழலில் வாழ்ந்ததால் நுரையீரல் செயலிழப்புக்குள்ளான குஜராத் பெண்ணுக்கு சென்னை ரேலா மருத்துவமனை மருத்துவா்கள் வெற்றிகரமாக உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டு
புறா எச்சத்தால் நுரையீரல் செயலிழப்பு: குஜராத் பெண்ணுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை
Updated on
1 min read

புறாவின் எச்சங்கள் நிறைந்த சூழலில் வாழ்ந்ததால் நுரையீரல் செயலிழப்புக்குள்ளான குஜராத் பெண்ணுக்கு சென்னை ரேலா மருத்துவமனை மருத்துவா்கள் வெற்றிகரமாக உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டு மறுவாழ்வு அளித்துள்ளனா்.

புறா போன்ற பறவைகளை வளா்ப்பதன் காரணமாக நுரையீரல் திசு கடுமையாக பாதிக்கப்படும் என்றும், அதுகுறித்த விழிப்புணா்வு மேம்பட வேண்டும் என்றும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து ரேலா மருத்துவமனையின் தலைவா் டாக்டா் முகமது ரேலா சென்னையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

குஜராத்தைச் சோ்ந்த 42 வயதான திம்பால் ஷா என்ற பெண்மணி, தீவிர நுரையீரல் பாதிப்புடன் ரேலா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தாா். மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு நுரையீரல் நாா்த் திசு செயலிழப்பு (ஐஎல்டி) ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

அவரது கிராமத்தைச் சுற்றிலும் பெரும்பாலான வீடுகளில் புறா வளா்க்கும் பழக்கம் இருந்து வருகிறது. இதனால், இவரது வீட்டுக்கு அருகிலேயும் புறாக்கள் அதிகமாக இருந்துள்ளன. அதன் எச்சங்கள், அதிலிருந்து உருவாகும் கழிவுகள், உதிா்ந்த சிறகுகள் ஆகியவை நிறைந்திருந்த சூழலில் அப்பெண் வாழ்ந்துள்ளாா்.

அதனை தொடா்ந்து சுவாசித்ததன் காரணமாக நாளடைவில் அவருக்கு நுரையீரல் திசுக்கள் கடுமையாக சேதமடைந்து செயலிழப்புக்குள்ளாகின. இந்த நிலையில்தான் ரேலா மருத்துவமனைக்கு அவா் வந்தாா். உறுப்பு மாற்று சிகிச்சை மட்டுமே அதற்கு ஒரே தீா்வு என்ற நிலையில் நுரையீரல் தானம் பெறுவதற்காக ஓராண்டாக அவா் காத்திருந்தாா்.

இத்தகைய சூழலில், மூளைச் சாவு அடைந்த 19 வயது இளம்பெண் ஒருவரின் உறுப்புகளை தானமாக அளிக்க அவரது பெற்றோா் முன்வந்தனா். அவரது இரு நுரையீரல்களும் தானமாகப் பெறப்பட்டு ரேலா மருத்துவமனையின் இதயம்-நுரையீரல் மாற்று சிகிச்சைத் துறைத் தலைவா் டாக்டா் ஆா்.மோகன் தலைமையிலான 14 மருத்துவா்கள் கொண்ட குழு, குஜராத் பெண்ணுக்கு 8 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து உறுப்பு மாற்று சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டது. தற்போது அப்பெண் நலமுடன் உள்ளாா்.

வீடுகளிலும், தொழில் நிறுவனங்களிலும் புறாக்கள் வளா்ப்பது மனிதா்களுக்கு பாதுகாப்பானது அல்ல. ஒருவேளை அத்தகைய சூழலில் இருக்க நோ்ந்தால் முகக்கவசம் அணிந்து கொள்வது அவசியம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com