சேலம்: மதுரை மாநாட்டிற்கான விளம்பர பிரசார வாகனத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தொடங்கி வைத்து, மாநாட்டு தெடக்கப் பாடலை வெளியிட்டார்.
அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரை மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக, அதிமுக சார்பாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மதுரை மண்டலம் சார்பில் தயார் செய்யப்பட்ட விளம்பர பிரசார வாகனத்தை சேலம் நெடுஞ்சாலைநகர் இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
இந்த பிரசார வாகனத்தில் அதிமுக வரலாற்றின் பொன்விழா என்ற தலைப்பில் எழுச்சி மாநாடு என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மாநாட்டின் தொடக்கப் பாடலையும் கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டார்.
இந்த பாடலானது விளம்பர வாகனம் மூலமாக ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது. வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிமுக பொன்விழா மாநாட்டிற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் விதமாக இந்த விளம்பர வாகனம் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
இந்த விளம்பர பிரசார வாகன சுற்றுப்பயணத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்துடன் பயணித்தனர்.
நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல செயலாளர் ராஜ்சத்யன், மண்டல துணைத் தலைவர் கௌரிசங்கர், சேலம் புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெயகாந்தன், மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கனகராஜ், மதுரை மாவட்ட இணைச்செயலாளர் தியாகு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.