செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வழங்கக்கோரி அவரது தரப்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதிய மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்ட (பிஎம்எல்ஏ) வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் உள்ளார்.
முன்னதாக, அவரது மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது. இதனால், ஆகஸ்ட் 7 முதல் 12 வரை செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை காவலில் இருந்தார்.
தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் 5 நாள்கள் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய அமலாக்கத்துறையின் கோரிக்கையை நீதிபதி மறுத்துள்ளார். மேலும் இந்த வழக்கு தொடர்பான 3,000 பக்க குற்றப்பத்திரிகையையும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கடந்த ஆக. 12 அன்று தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நகல், கைது செய்ததற்கான பிடி வாரண்ட் உள்ளிட்ட செந்தில் பாலாஜி தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் தரக்கோரி அவரது தரப்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.