பாம்பன், தனுஷ்கோடி பகுதியில் வெள்ளிக்கிழமை கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலவி வருகிறது. அதோடு தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நாளை மறுநாள் (டிச.3) புயலாக வலுவடைந்து சென்னைக்கும் மச்சிலிடப்பட்டினத்திற்கும் இடையே டிசம்பர் 4 தேதி மாலை கரையை கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில், பாம்பன், தனுஷ்கோடி பகுதியில் வெள்ளிக்கிழமை கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் 8 ஆவது நாளாக கடலுக்கு செல்வதற்கு தடை தொடரும் நிலையில், தற்போது சுற்றுலாப் பயணிகளும் கடற்கரைக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.