ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பாளரை அறிவித்த ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
பொதுக்குழு உறுப்பினர் மூலம் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அறிவிக்கப்பட்ட வேட்பாளரை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேல்முருகனை வேட்பாளாராக ஓபிஎஸ் அறிவித்திருந்தார். எனினும் பாஜக போட்டியிடுவதாக இருந்தால் வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்தார். தற்போது உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து வேட்பாளரை வாபஸ் பெறுவார் எனத் தெரிகிறது.
இது தொடர்பாக வைத்திலிங்கம், பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் ஓபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலை காரணம் காட்டி எடப்பாடி பழனிசாமி தரப்பினா் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரியும் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் தொடர்ந்த இந்த இடையீட்டு மனுவுக்கு தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், ஈரோடு இடைத்தேர்தலில் பொதுவான வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பேசி முடிவெடுக்கலாம் என அறிவுறுத்தியது.
இபிஎஸ், ஓபிஎஸ் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட தனித்தனியாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இபிஎஸ் சார்பில் ஈரோட்டில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்த கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார். ஓபிஎஸ் சார்பில் வேல்முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.