தமிழ் மக்களின் நலனுக்காக சொல்லாததையும் செய்வோம், சொல்லாமலும் செய்வோம் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், மக்களின் மன மகிழ்ச்சியே திராவிட மாடலின் நோக்கம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம் தொடங்கியதும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், கடந்த 9ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆளுநர் நடத்தையால் நடந்ததை மீண்டும் பேசி அரசியலாக்க விரும்பவில்லை.
தமிழகத்தில் 13,428 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. அரசின் அறிவிப்புகளில் 2,892 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளன.
ஒரு கோடி பேருக்கு அரசு சார்பில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 15 மாதங்களில் 1.50 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
சக்தியை மீறி செயல்படுவேன்
நாள்தோறும் உழைத்து வருகிறேன். ஆனால் நான் நொடிக்கு நொடி உழைத்து வருகிறேன். யாரும் பாராட்ட வேண்டும் என்று நான் உழைக்கவில்லை. அது என் இயல்பு.
தமிழ் மக்களின் நலனுக்காக சொன்னதைச் செய்வோம், சொல்லாததையும் செய்வோம். ஏன் சொல்லாமலும் செய்வோம். 10 ஆண்டுகள் முடங்கிப்போயிருந்த தமிழகத்தை முன்னோக்கி ஓட வைத்திருக்கிறோம்.
அனைத்தையும் மத்திய அரசிடம் கேட்டு கேட்டு வாங்கவேண்டிய நிலை இருக்கிறது. மக்களால் தேர்வான ஆட்சியின் மாண்பை காக்கவும் ஆட்சியின் வலிமையை உணர்த்தவும் எனது சக்தியை மீறி செயல்படுவேன் எனக் கூறினார்.
மதத்துக்கு எதிரானதல்ல திமுக
மக்களின் மன மகிழ்ச்சியே திராவிட மாடலின் நோக்கம். தொழில், வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்லாமல் சமூக வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும். மதவாதம் இனவாதம் தீவிரவாதத்தை வேரோடு அழிப்போம். திமுக ஆட்சி மதவாதிகளுக்குத்தான் எதிரானதே தவிர மதத்துக்கு எதிரனது அல்ல.
கடந்த ஆண்டில் 9000 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளேன். கடந்த ஓராண்டில் 655 நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.