கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டிற்கு சோதனைக்கு சென்றபோது பெண் அதிகாரியிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூரில் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் வருமானவரித் துறை பெண் அதிகாரி ஒருவர் சோதனைக்காக செல்ல முயன்றார். அப்போது அவரது அடையாள அட்டையை காண்பிக்குமாறு அங்கிருந்த திமுகவினர் கேள்வி கேட்டனர். இதனால் திமுகவினருக்கும் பெண் அதிகாரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அந்தப் பெண் அதிகாரி, குமார் என்ற திமுக தொண்டரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த திமுக தொண்டர் குமார் திடீரென மயக்கம் அடைந்தார். பின்னர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் திமுகவினர் கருரில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனிடையே குமாரை தாக்கிய பெண் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கூறி திமுகவினர் அவரது காரை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த கரூர் நகர காவல் நிலையத்தினர் திமுகவினரை சமாதானம் செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து காருடன் பெண் அதிகாரியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. முன்னதாக பெண் அதிகாரி வந்த கார் கண்ணாடி மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது.