
கோப்புப்படம்
வரும் ஜூன் 2 ஆம் தேதி வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி வசந்த திருவிழா புதன்கிழமை தொடங்கியது. ஜூன் 2இல் வைகாசி விசாகம் நடைபெறுகிறது.
தமிழ்க் கடவுள் முருகப்பெருமான் அவதரித்த ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் வசந்த திருவிழாவாக பத்து நாள்கள் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு வசந்த திருவிழா புதன்கிழமை (மே 24) தொடங்கியது.
பத்தாம் நாளான ஜூன் 2ஆம் தேதி வைகாசி விசாகத்தை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகளும், சுவாமி ஜெயந்திநாதா் வசந்த மண்டபம் சோ்ந்ததும் மாலையில் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனையும் நடைபெறும். தொடா்ந்து வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வருதலும், முனிக்குமாரா்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெறுகின்றன. மகா தீபாராதனைக்குப் பின், தங்கச் சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி ஜெயந்திநாதா் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து திருக்கோயில் சோ்கிறாா்.
இந்த நிலையில், வரும் ஜூன் 2 ஆம் தேதி வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
இந்த விடுமுறைக்குப் பதிலாக ஜூன் 10 ஆம் தேதி அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.