பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம், நாகப்பட்டு, கிராம மக்கள் தேர்தல் வாக்குப்பதிவை புறக்கணித்துள்ளனர்.
அரசு அதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு பயந்து அரசு ஊழியர்கள் 9 பேர் மட்டுமே இதுவரை வாக்களித்தனர்.
பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு வகையில் ஏகனாபுரம் கிராம மக்கள் 630 நாள்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்.
ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும்,தேர்தல் ஆணையம் அதிகாரிகளும் ஏகனாபுரம் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வாக்களிக்க கோரிக்கை விடுத்த நிலையில் கிராம மக்கள், அவர்களது கோரிக்கைளை நிராகரித்தனர்.
ஏகனாபுரம் கிராமத்தில் 1400 வாக்காளர்கள் உள்ள நிலையில், ஏகனாபுரம் ஊராட்சி ஒன்றியம் அரசு நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் ஒருவர் கூட வாக்களிக்க வரவில்லை.
ஸ்ரீ பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏகனாபுரம், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட நாகப்பட்டு ஆகிய இரு கிராமங்களில் உள்ள வாக்காளர்கள் வாக்களிக்க வராமல் வாக்களிப்பை புறக்கணித்து உள்ளனர்.
இன்று மாலை 6 மணி வரை பதிவு நடைபெறும் நிலையில் கிராம மக்கள் அனைவரும் வாக்களிக்க வர வேண்டும் என்பதே மாவட்ட நிர்வாகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.