மேட்டூர் அனல் மின் நிலைய குடியிருப்பை சேர்ந்தவர் ஜெயக்குமார். மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி தமிழரசி (53), மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தொழிலாளர் நல அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவர்களது மகன் புகழ் ஒளி (22), பொறியியல் பட்டப்படிப்பு இறுதி ஆண்டு படித்து வரும் மாணவர்.
நேற்று(ஏப். 28) இரவு தமிழரசியின் உறவினரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க தமிழரசியும் அவரது மகன் புகழ் ஒளியும் காரில் அழைத்துச் சென்றனர்.
சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தப் பிறகு நள்ளிரவில் சேலத்திலிருந்து மேட்டூர் நோக்கி புறப்பட்டனர்.
அப்போது தமிழரசியின் கணவர் ஜெயக்குமார் அங்குள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து விட்டு காலையில் வரும்படி தொலைபேசியில் கூறியுள்ளார்
ஆனால், தமிழரசியும் அவரது மகன் புகழ் ஒளியும் இரவில் அங்கிருந்து காரில் புறப்பட்டு வந்தனர்.
மேச்சேரி அருகே உள்ள பொட்டனேரி நான்கு ரோட்டில் இன்று அதிகாலை நிலை தடுமாறிய கார் அருகில் இருந்த புளிய மரத்தின் பலமாக மோதியது. இதில் காரில் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது.
சம்பவ இடத்திலேயே தமிழரசி பலியானார். கார், புளிய மரத்தில் மோதிய சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேட்டூர் அரசு மருத்துவமனையில் தமிழரசியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து போனதாக தெரிவித்தனர்.
தமிழ் ஒளி முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பலியானார். மீண்டும் அவரது சடலம் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக மேச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.