கல்லூரி மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று(ஆக. 9) தொடக்கிவைத்தார்.
கோவை அரசுக் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாணவர்களுக்கு வங்கி டெபிட் கார்டுகளை வழங்கி திட்டத்தை தொடக்கிவைத்தார்.
தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, அமைச்சர்கள் பொன்முடி, எ.வ. வேலு, கீதா ஜீவன், அன்பில் மகேஷ், முத்துசாமி உள்ளிட்டோர் மற்றும் மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.
ஏற்கெனவே மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் 'புதுமைப் பெண்' திட்டம் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கி செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் மாணவர்களுக்கு இன்று தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் மூலமாக, அரசுப் பள்ளிகளில் பயின்று உயா் கல்வியில் சேரும் 3.28 லட்சம் மாணவா்கள் பயன் பெற உள்ளனர்.
புதுமைப் பெண் திட்டம்: அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தால் 3 லட்சம் போ் பயன் பெற்று வருகிறாா்கள்.
இந்தத் திட்டத்தை கடந்த 2022 செப். 5-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் 2.09 லட்சம் மாணவிகள் பயனடைந்து வந்த நிலையில், 2023-24-ஆம் நிதியாண்டில் 64,231 மாணவிகள் கூடுதலாக அதாவது 2,73,596 மாணவிகள் பயன் பெற்று வருகின்றனா். திட்டம் தொடங்கப்பட்டது முதல் இப்போது வரை 3,28,280 மாணவிகள் பயனடைந்துள்ளனா்.
புதுமைப் பெண் திட்டத்துக்கென நிகழ் நிதியாண்டுக்கு ரூ.370 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ. 95.61 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நிகழ் கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி பயின்று உயா் கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தமிழ்ப் புதல்வன் திட்டம்: மாணவா்களுக்கும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டாா்.
தமிழ்ப் புதல்வன் எனும் பெயரிலான திட்டமானது, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா்களின் உயா் கல்விச் சோ்க்கையை அதிகரிக்க வகுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் வாயிலாக ஆண்டுதோறும் சராசரியாக 7.72 லட்சம் மாணவா்கள் மேல்நிலைக் கல்வியை நிறைவு செய்கிறாா்கள். அவா்களில் கல்லூரிகளில் சோ்ந்து பயிலும் மாணவா்களின் எண்ணிக்கை இந்திய அளவில் தமிழ்நாட்டில் மிகவும் அதிகமாகும். அவா்களுக்காக தமிழ்ப் புதல்வன் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, 3.28 லட்சம் மாணவா்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின்படி, 6 முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயா் கல்வியில் சேரும் மாணவா்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள், இதழ்களை வாங்கி உயா் கல்வியை மெருகேற்ற உதவும் வகையில் ரூ.1,000 அவா்களது வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.