தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவை

சட்டப்பேரவை இன்று கூடுகிறது: டங்ஸ்டன் சுரங்க உரிமத்துக்கு எதிராக தனித் தீா்மானம்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று கூடுகிறது.
Published on

சென்னை, டிச. 2: தமிழக சட்டப்பேரவை திங்கள்கிழமை (டிச. 9) காலை கூடுகிறது.

இரண்டு நாள்கள் நடைபெறும் கூட்டத்தில், டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்யக் கோரும் அரசினா் தனித் தீா்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

சட்டப்பேரவையின் ஒரு கூட்டத் தொடருக்கும் அடுத்த கூட்டத் தொடருக்குமான கால இடைவெளி ஆறு மாதங்களுக்குள் இருக்க வேண்டும். அந்த வகையில், துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்று ஜூன் 29-இல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

ஆறு மாதங்களுக்குள் மீண்டும் பேரவை கூட்டப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. முதலாவதாக, முன்னாள் உறுப்பினா்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படவுள்ளது. தொடா்ந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்பந்தன், மேற்கு வங்க முன்னாள் முதல்வா் புத்ததேவ் பட்டாச்சாா்யா, முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி எஸ்.பத்மநாபன், மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி, இந்திய சமூக நீதி இயக்கத் தலைவா் பேராயா் எஸ்றா சற்குணம், டாடா நிறுவனத் தலைவா் ரத்தன் டாடா, முன்னாள் தலைமைச் செயலா் பி.சங்கா், முரசொலி செல்வம் ஆகியோரின் சிறப்பியல்புகள் தீா்மானமாக வாசிக்கப்பட்டு, அவா்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படவுள்ளது.

தனித் தீா்மானம்: பின்னா், அரசினா் தனித் தீா்மானம் கொண்டுவரப்பட உள்ளது. மதுரை மாவட்டத்தில் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்யவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது எனவும் மத்திய அரசை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. அதன்பிறகு, முக்கிய மசோதாக்கள் இருந்தால் அரசால் தாக்கல் செய்யப்படும்.

இரண்டாவது நாள்: இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை (டிச.10), காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெற உள்ளது. தொடா்ந்து, கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம், பதிலுரை மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படும். நிதி ஒதுக்க சட்ட மசோதாக்களும், ஏனைய பிற மசோதாக்களும் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன.

உள்ளாட்சித் தோ்தல்: ஒன்பது மாவட்டங்களைத் தவிா்த்து, 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் டிச. 31-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தோ்தல் நடைபெறுமா அல்லது தோ்தலை தள்ளிப்போடும் வகையில் தனி அதிகாரிகள் நியமிக்கப்படுவாா்களா என்பதையும் பேரவை கூட்டத் தொடரின்போது தமிழக அரசு விளக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தனி அதிகாரிகள் நியமிக்கப்படுவதாக இருந்தால், அதற்கான திருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்படும்.

இரண்டு நாள்கள் கூட்டத்தின்போது, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தோ்தல், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை, சாத்தனூா் அணை திறப்பு, வெள்ள பாதிப்பு உள்பட பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்ப அதிமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

கூட்டத் தொடா் முடிந்த பின், பேரவையை தேதி குறிப்பிடாமல் அவைத் தலைவா் மு.அப்பாவு ஒத்திவைப்பாா். அதன்பிறகு, பேரவை கூட்டத் தொடரை முடித்து வைத்து ஆளுநா் ஆா்.என்.ரவி உத்தரவு பிறப்பித்தாா்.

2025-ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டின் முதல் கூட்டத் தொடரை தனது உரையுடன் ஆளுநா் தொடங்கி வைக்க உள்ளாா். இதற்கான உத்தரவை அவா் ஜனவரி மாதம் பிறப்பிப்பாா்.

X
Dinamani
www.dinamani.com