நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

தீபத் திருவிழா: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு டிச.12 முதல் சிறப்பு ரயில்கள்!

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு டிசம்பர் 12 -15 வரை சிறப்பு ரயில்கள்..

News image

கோப்புப் படம்

Updated On :10 டிசம்பர் 2024, 1:51 pm

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு டிசம்பர் 12,13,14,15-ஆம் தேதிகளில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக, அங்குள்ள கோயில் மலை உச்சியில் டிசம்பர் 13-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மகாதீபம் ஏற்றப்படவுள்ளது. இத்திருநாளில் அதிகளவில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் டிசம்பர் 12, 13,14,15-ஆம் தேதி விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

அதன்படி விழுப்புரத்திலிருந்து டிசம்பர் 13,14,15-ஆம் தேதிகளில் காலை 9.25 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06130) அதே நாளில் முற்பகல் 11.10 மணிக்கு திருவண்ணாமலைக்கு சென்றடையும்.

எதிர்வழித்தடத்தில் திருவண்ணாமலையிலிருந்து அதேநாள்களில் பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை - விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்புரயில் (வண்டி எண் 06129) பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும்.

இதுபோன்று விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து டிசம்பர் 12 முதல் 15 ஆம் தேதி வரை இரவு 9.15 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06145) அதே நாளில் இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலைக்கு சென்றடையும்.

எதிர்வழித்தடத்தில் திருவண்ணாமலை ரயில் நிலையத்திலிருந்து டிசம்பர் 13-ஆம் தேதி முதல்16 -ஆம் தேதி வரை அதிகாலை 3.30 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை - விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06146) அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுசெல்லும்.

திருச்சியிலிருந்து சிறப்பு ரயில் இயக்கம்:

திருச்சியிலிருந்து விழுப்புரம், திருவண்ணாமலை வழியாக வேலூர் கண்டோன்மென்ட் வரை சிறப்புரயில் இயக்கப்படவுள்ளது.

அதன்படி டிசம்பர் 13-ஆம் தேதி காலை 8 மணிக்குத் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் திருச்சி - வேலூர் கண்டோன்மென்ட் சிறப்பு விரைவு ரயில் (வண்டி எண் 06147) பிற்பகல் 2.50 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் சென்றடையும்.

எதிர்வழித்தடத்தில் டிசம்பர் 13-ஆம் தேதி இரவு 11 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் வேலூர் கண்டோன்மென்ட் - திருச்சி சிறப்பு ரயில் (வண்டி எண் 06148) மறுநாள் காலை (டிச.14) காலை 7.20 மணிக்குத் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில்கள் திருவெறும்பூர், பூதலூர், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, வைத்தீசுவரன் கோயில், சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், திருவண்ணாமலை, போளூர், ஆரணிசாலை ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுசெல்லும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.