சென்னை: வேளாண் பட்ஜெட்டில், திருமலைச் சமுத்திரத்தில் மருதம் பூங்கா அமைக்கவும், குமரியில் சூரியத் தோட்டம், மூலிகைப் பயிர் சாகுபடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வேளாண் பட்ஜெட்டை தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பதாவது,
மூலிகைப் பயிர்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், செங்காந்தள், மருந்து கூர்க்கன், அவுரி சென்னா, நித்திய கல்யாணி ஆகிய மூலிகைப் பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
கன்னியாகுமரியில், சூரிய உதயப் புள்ளிக்கும் மறைவுப் புள்ளிக்கும் இடையே சூரியத் தோட்டம் அமைக்கப்படும். இதற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு.
காவிரி ஆற்றின் படுகையில், தஞ்சாவூர் மாவட்டம் திருமலைச் சமுத்திரம் என்ற இடத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருதம் பூங்கா அமைக்கப்படும்.
ஊட்டி ரோஜா பூங்காவில் புதிய 100 இரக ரோஜா வகைகள் நடவு செய்யப்பட்டு பூங்கா மேம்படுத்தப்படும்.
விவசாயிகள் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கிட ரூ.90 இலட்சம் ஒதுக்கீடு.
ரூ.32.90 கோடி மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்.
விவசாயிகள் நிரந்தர பந்தல் அமைத்து பந்தல் காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்க ரூ. 9.40 கோடி நிதி ஒதுக்கீடு.
பேரிச்சைப் பழம் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.30 இலட்சம் ஒதுக்கீடு.
மரவள்ளிப்பயிரில் மாவுபூச்சியை கட்டுப்படுத்த ரூ.1 கோடி பின்னேற்பு மானியம்.
டெல்டா மாவட்டங்களில் 2,235 கிலோ மீட்டர் நீளத்திற்கு "சி" "டி" பிரிவு வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
ரூ.32.90 கோடி மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்.
ஒருங்கிணைந்த முந்திரி வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.3.36 கோடி நிதி ஒதுக்கீடு.
புதிய அரசு தோட்டக்கலை பண்ணைகள், பூங்காக்கள் அமைத்திட ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.