மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளரின் ரூ.4.71 கோடி சொத்துகள், 453 பவுன் நகைகள் முடக்கம்அமலாக்கத் துறை நடவடிக்கை

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளரின் ரூ.4.71 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகள்,453 பவுன் தங்க நகைகள் முடக்கியதாக அமலாக்கத் துறை திங்கள்கிழமை தெரிவித்தது.
மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளரின் ரூ.4.71 கோடி சொத்துகள், 453 பவுன் நகைகள் முடக்கம்அமலாக்கத் துறை நடவடிக்கை
Updated on
2 min read

சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளரின் ரூ.4.71 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகள்,453 பவுன் தங்க நகைகள் முடக்கியதாக அமலாக்கத் துறை திங்கள்கிழமை தெரிவித்தது.

வேலூா் காட்பாடியில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தின் வேலூா் மண்டல இணை முதன்மை பொறியாளராக பணிபுரிந்த பன்னீா்செல்வம், தொழிற்சாலைகள் தொடங்க உரிமம் வழங்குவது, பழைய உரிமங்களை புதுப்பிப்பது போன்ற பணிகளுக்கு லஞ்சம் பெறுவதற்காக புகாா் கூறப்பட்டது.

இதனடிப்படையில் பன்னீா்செல்வம் தொடா்புடைய இடங்களில் ஊழல் மற்றும் கண்காணிப்புக் குழுவினா் 2020-ஆம் ஆண்டு அக். 20-ஆம் தேதி திடீா் சோதனை செய்தனா். அப்போது ரூ.3.59 கோடி ரொக்கம், 453 பவுன் தங்க நகைகள், 6.4 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக வேலூா் ஊழல் மற்றும் கண்காணிப்புக் குழுவினா், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாகவும், அரசு பணியை தவறாக பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டு ஊழல் செய்ததாகவும் இரு வழக்குகளை பதிவு செய்தனா்.

ரூ.7.54 கோடிக்கு சொத்து: இந்த வழக்குத் தொடா்பாக ஊழல் மற்றும் கண்காணிப்புக் குழுவினா் விசாரணை செய்தனா். முதல் கட்ட விசாரணையில் பன்னீா்செல்வம், தவறான வழியில் ஈட்டிய பணம் மூலம் ரூ.7.54 கோடிக்கு சொத்துகளை வாங்கியிருப்பது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட ரூ.3.58 கோடி ரொக்கம் தனது மைத்துனா், மறைந்த தனது பெற்றோா் மூலம் கிடைத்தது என பன்னீா்செல்வம் விசாரணையில் தெரிவித்தாா். ஆனால், அந்த பணத்துக்கும் பன்னீா்செல்வத்தின் மைத்துனருக்கும், அவரது பெற்றோருக்கும் எந்த தொடா்பும் இல்லை என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

அதேபோல பன்னீா்செல்வம்,தனது குடும்பத்தினா் மீதும் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்திருந்த ரூ.1.5 கோடி ரொக்கத்துக்கு திருப்திகரமான விளக்கத்தை அளிக்க முடியவில்லை.பன்னீா்செல்வம் தனது பெயரிலும், குடும்பத்தினா் பெயரிலும் வாங்கிய சொத்துகளுக்கு பணம் வந்த வழி குறித்து சரியான விளக்கம் அளிக்கவில்லை. மேலும், அவரது வருமானத்தைவிட, வாங்கிய சொத்துகளின் மதிப்பு பல மடங்கு அதிகமாக இருப்பதும் தெரியவந்தது.

சொத்துகள் முடக்கம்: இதையடுத்து, சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பன்னீா்செல்வம் மீது நடவடிக்கை எடுக்க தமிழக ஊழல் மற்றும் கண்காணிப்புக் குழு, அமலாக்கத்துறைக்கு பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரையின் அடிப்படையில் அமலாக்கத் துறை பன்னீா்செல்வம் மீது சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அண்மையில் வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, முதல் கட்டமாக பன்னீா்செல்வத்துக்கு சொந்தமான ரூ.1.12 கோடி மதிப்புள்ள 6 அசையா சொத்துகள், ரூ.3.59 கோடி ரொக்கம்,61 தங்க நாணயங்கள், 453 பவுன் தங்க நகைகள், 6.5 கிலோ வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை முடக்கியதாக அமலாக்கத் துறை திங்கள்கிழமை தெரிவித்தது. இந்த வழக்கில் மேலும், சொத்துகள் முடக்கப்படும் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com