சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 19,484 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து, நாளைமுதல் பேருந்துகளை இயக்காமல் வேலைநிறுத்ததில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் பேசியது:
“பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திட்டமிட்டபடி ஜனவரி 12-ஆம் தேதி முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். தமிழகம் முழுவதும் 19,484 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. பொங்கல் முடிந்து திரும்புவோருக்கு வசதியாக ஜன.16 முதல் 18 வரை 17,589 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
சென்னையில் இருந்து 11,006 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. கே.கே.நகர், தாம்பரம், பூந்தமல்லி, மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர் பேருந்துகள் இயக்கப்படும். தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பக்கத்தில் இருந்து புறப்படும்.
கிளாம்பக்கம், கோயம்பேடு, தாம்பரம் ஆகிய பேருந்து நிலையங்களில் 11 முன்பதிவு நிலையங்கள் செயல்படும். கிளாம்பாக்கத்தில் 5 முன்பதிவு நிலையங்கள் அமைக்கப்படும்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு 24 மணிநேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.