நாகப்பட்டினம்: போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக 85% பேருந்துகள் இயக்கப்படுவதாக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாகை மாவட்டத்தில் காலை 10.30 மணி நிலவரப்படி 85% பேருந்துகளும், கிராமப்புறங்களுக்கு 100% பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
நாகை பணிமனையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு 52 பேருந்துகளில், 32 பேருந்துகளும். நாகையில் இருந்து திருச்சி, பழனி, திருப்பூர் மாவட்டங்களுக்கு வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்படுவதால், வெளியூர்களுக்கு பயணிகள் பயணம் சிரமமின்றி பயணிக்கின்றனர்.
இதையும் படிக்க: தமிழகத்தில் பள்ளி பொதுத் தேர்வு தேதி மாற்றப்படுமா?
பேருந்துகள் பெரும்பான்மையாக இயக்கப்பட்டாலும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் காரணமாக நாகை பேருந்து நிலையத்தில் பயணிகளின் வருகை குறைவாகவே காணப்படுகிறது.
85% பேருந்துகள் இயக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் கூறினாலும், பேருந்து கிடைக்கவில்லை! 1 மணி நேரமாக காத்திருக்கிறோம், கல்லூரிக்கு காலதாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது, என பயணிகள் வேதனை அடைந்துள்ளனர். தரங்கம்பாடி கல்லூரிக்கு வழக்கமாக செல்லும் நகர பேருந்து சரியான நேரத்திற்கு வந்துள்ளது.
இதனிடையே பிற்பகல் 12 மணிக்குள் நாகை மாவட்டத்தில் 100% பேருந்துகள் இயக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாகை பணிமனை பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.