பொங்கல் பண்டிகையையொட்டி பேருந்து சேவை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கம் குறித்து ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் பொங்கலையொட்டி பேருந்து சேவை பாதிக்காத வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. போக்குவரத்து உயர் அலுவலர்களுடன் கலந்தாலோசித்து பணிகள் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டார்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பணப் பலன்கள் கிடைக்கவில்லை. பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு 96 மாத அக விலைப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதற்கு பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதனிடையே போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை 6 மணியிலிருந்து தமிழகம் முழுவதும் வழக்கமாக இயக்கப்படும் 9,452 பேருந்துகளில் 8,787 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.