தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலைய நுழைவாயிலுக்கு இலவச மினி பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சிவசங்கர் கூறுகையில்,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட உள்ளனர். வழக்கமாக பண்டிகை காலத்தில் பொதுமக்கள் சிரமின்றி சொந்த ஊர்களுக்குச் சென்று வர அவர்களின் வசதிக்காகவும், நன்மைக்காவும் தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அந்த வகையில், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் கடந்த மாதம் 30ஆம் தேதி பயன்பாட்டிற்கு வந்தது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
முன்னேற்பாடு பணிகள் குறித்தும் மற்றும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார். போதுமான பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், கூட்ட நெரிசல் நிச்சயம் இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.