
ஆலங்குளம்: தேசியக்கொடி ஏற்ற அனுமதி மறுத்த போலீசாரை கண்டித்து ஆலங்குளத்தில் காங்கிரசார் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடியரசு நாளையொட்டி, தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள காமராஜர் சிலை அருகில் தேசியக் கொடி ஏற்ற காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்திருந்தனர். ஆண்டுதோறும் இதே இடத்தில் கொடி ஏற்றப்பட்டு வரும் நிலையில், உரிய அனுமதி பெறவில்லை என்ற காரணத்தை கூறி காவல்துறையினர் அந்த கொடி கம்பத்தை அகற்றிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காங்கிரஸார் தேசியக்கொடி ஏற்ற அனுமதி மறுத்த போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.எனினும் போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
இதையும் படிக்க | தேசியக் கொடியேற்றினார் ஆளுநா் ஆா்.என்.ரவி!
இதையடுத்து தேசிய தலைவர் சிலை முன்னால் தேசியக்கொடி ஏற்ற அனுமதி கிடையாதா என்று ஆத்திரமடைந்த காங்கிரஸார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு தலைமையில் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் திருநெல்வேலி தென்காசி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
தகவல் அறிந்து வந்த போலீஸார் சமரச பேச்சில் ஈடுபட்டனர். அப்போது அகற்றப்பட்ட கொடிக்கம்பம் மீண்டும் காங்கிரஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காமராஜர் சிலை முன்பு தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் வில்லியம் தாமஸ்,ஓபிசி அணி மாநில நிர்வாகி ஞானபிரகாஷ், அருணாசலம், லெனின், லிவிங்ஸ்டன், துரைப்பாண்டி, ஏசுராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.